Feb 24, 2010

கூகுளின் புதிய அவதாரம் - Buzz...

ஐந்தாண்டுகளுக்கு முன் ஜிமெயில் ஜஸ்ட் ஒரு இமெயிலாக மட்டுமே இருந்தது. அதன் பின் சேட் என்னும் அரட்டை மனை, வீடியோ சேட் மனை ஆகியன அதற்குள்ளேயே தரப்பட்டன.

ஒரே பிரவுசர் விண்டோவில் இவை அனைத்தும் சாத்தியமே என்று கூகுள் காட்ட, மக்கள் இதில் மொய்த்தனர். ஏனென்றால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றனர். தாங்கள் படித்த, கேள்விப்பட்ட தகவல்களை, எடுத்த, அமைத்த போட்டோக்களை மற்றவருக்கு அனுப்பி அவர்கள் கருத்தை, பாராட்டை, திட்டு தலைப் பெற விரும்புகின்றனர்.

இவர்களுக்கு இணையம் இடம் தரும் வகையில் வளைந்து கொடுக்கிறது.அந்த வகையில் கூகுள் சென்ற வாரம் Buzz என்னும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. இதுவும் ஜிமெயிலுக்குள்ளாகவே அமைக்கப்பட்டுள்ளது.

Twitter, FaceBook, Friendfeed என உள்ள சோஷியல் தளங்களில் உள்ள வசதிகளைத் தன் மெயில் தளத்திலேயே கொண்டு வந்துள்ளது கூகுள். இதனை உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால்,http://www.google.com/buzz முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள்.

அங்கு Try Buzz in GMail என்னும் பட்டன் காட்டப்படும். அதில் கிளிக்கிடுங்கள். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் காட்டப்படும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் இணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். சில நாட்களில் இந்த வசதி உங்கள் மெயில் இன்பாக்ஸ் பெட்டியில் கிடைக்கும். இதில் "Buzz" என ஒரு பட்டன் காட்டப்படும்.

இதில் அழுத்துவதன் மூலம் பயன்பாடு கிடைக்கும். இதன் மூலம் இணைய தளங்களுக்குச் செல்லலாம். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகிற்குத் தெரிவிக்கலாம்; அல்லது உங்கள் நண்பர்கள் குழுவிற்கு மட்டும் என வரையறை செய்திடலாம்.

இதன் மூலம் உங்கள் நண்பர்கள் நீங்கள் எந்த தளங்களுக்கெல்லாம் சென்று தகவல்களைத் தருகிறீர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதே போல மற்றவர்கள் "Buzz" மூலம் தரும் தகவல்களையும் நீங்கள் அறியலாம்.

குறிப்பிட்ட சிலரின் தகவல்களை மட்டும் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்; அதற்கு உங்கள் பதில் கருத்துக்களைப் பதியலாம். இனம், மொழி, சாதி, நாடு என்ற வேறுபாடற்ற சமுதாயம் அமைய இத்தகைய முயற்சிகள் வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து இதனை வரவேற்போம்.


அன்புடன்
உங்கள்
மாறன்....

Feb 22, 2010

உங்கள் சாப்ட்வேரை picture-ல் மறைக்க...

உங்களுடைய சாப்ட்வேர்கள் மற்றும் அனைத்து பைல்களையும் picture-ல் மறைக்க முடியும். சாதரணமாக ஒப்பன் செய்தால் அது படமாகத்தான் காட்டப்படும்.

முதலில் ஒரு jpg பைல் மற்றும் மறைக்க வேண்டிய rar பைலையும் ஒரு போல்டரில் போடவும், பின்னர் command வழியாக அந்த directory க்குள் லாகின் செய்யவும்.
பின்னர் கீழே உள்ளது போல command கொடுக்கவும்.

copy /b filename.jpg + filename.rar outputname.jpg (
படத்தை பெரிதாக்கி பார்க்கவும்.)

இப்போது outputname.jpg என்ற பைல் ஒன்று உருவாகியிருக்கும்.
இதனை சாதாரணமாக திறக்கும் போது படமாகத்தான் ஓப்பன் ஆகும்.





















இதனை
open with.. winrar வழியாக திறக்கும் போது filename.rar என்னும் பைல் திறக்கும்.

.








































இந்த
command மூலமாக அனைத்து வகையான பைல்களையும் படத்துக்குள் மறைக்க முடியும்.

அன்புடன்
உங்கள்
மாறன்....

Feb 17, 2010

விண்டோஸில் பாஸ்வர்ட்(Password) மறந்து போனால்...

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் எட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லொக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்இதனைப் பற்றி ஏற்கனவே ஐடி வலம் பகுதியிலும் சொல்லியிருக்கிறேன்.

இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது? அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.
அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

மறக்காம உங்க கருத்துக்களை அனுப்புங்க.......
அன்புடன்
உங்கள்
மாறன்....

Feb 16, 2010

வித்தியாசமான ஒரு புரோகிராம் (Unchrome)...

அண்மையில் இணையத் தில் பிரவுஸ் செய்து கொண் டிருந்த போது வித்தியாசமான புரோகிராம் ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. அதன் பெயர்Unchrome. கூகுளின் குரோம் பிரவுசர் தொகுப்பினைப் பிடிக்காத யாரோ இதனை வடிவமைத்து வழங்கியது போல் முதலில் தோன்றியது.

ஆனால் இந்த தொகுப்பு செயல்படுவதற்கான காரணங்களைப் படித்த போது இதுவும் சரிதான் என்று எண்ணத் தோன்றியது.

கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர் தற்போதைக்கு இயங்கும் பிரவுசர்களில் மிகவும் வேக மாக இயங்கும் பிரவுசர் தான். பல புதிய வசதிகளையும் இது தந்துள்ளது என்பதுவும் உண்மையே. ஆனால் இந்த பிரவுசர் நம்மைப் பற்றி பல பெர்சனல் தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது.

இதனை கூகுள் பாதுகாப்பாக பயன்படுத்துமா என்று சந்தேகம் வந்ததாலேயே இந்த புரோ கிராம் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது. கூகுள் அதன் வாடிக்கையாளர்களை அது தந்துள்ள அடையாள எண் மூலம் தான் யார் எனத் தெரிந்து கொள்கிறது.

இந்த புரோகிராமைப் பயன் படுத்துகையில் அந்த அடை யாள எண்ணை அழித்து விடு கிறது. இதனால் நம் பெர்சனல் தகவல்கள் கூகுள் நிறுவனத் திற்குக் கிடைக்காமல் போய் விடுகிறது என்று இதனை அமைத்தவர்கள் கூறுகின்றனர்.

உங்களுக்கும் இதே போன்று சந்தேகம் வந்து கூகுளில் உள்ள உங்கள் அடையாள எண்ணை நீக்க வேண்டும் என்றால் கீழ்க் காணும் முறையில் செயல்படவும்.

1. முதலில் குரோம் பிரவுசர் இயங்கிக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தவும். பின் வேறு ஒரு பிரவுசர் மூலம் http://www.abelssoft.net/unchrome.exe என்ற முகவரிக் குச் செல்லவும்.
2. இங்கு கிடைக்கும் UnChrome சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்திடவும். இதனை அப்படியே இயக் கலாம். அல்லது சேவ் செய்து வைக்கலாம்.
3. இயக்கத் தொடங்கினால் ஒரு ஸ்கிரீன் கிடைக்கும்.
4. பின் Remove Unique ID Nowஎன்ற இடத்தில் கிளிக் செய்திடவும். பின் ஓகே அழுத்தி வெளியேறவும். இதற்கு முன் குரோம் பிரவுசர் மூடப் பட்டிருக்க வேண்டும் என் பதனை நினைவில் கொள்க.
5. அடுத்து உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழ்க்காணும் காட்சி கிடைக்கும்.
6. இனி என்ன? குரோம் பிரவுசரை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் அந்த பிரவுசரால் உங்களை அடையாளம் காண முடியாது. அவ்வளவே என்று இந்த அன்குரோம் தளத் தில் கூறப்பட்டுள்ளது


அன்புடன்
உங்கள்
மாறன்...

Feb 15, 2010

ட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி!!!




முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.

முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer

இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.

அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.

அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்

Read more: www.maran.co.nr

அன்புடன்
உங்கள்
மாறன்....

அனைவருக்கும் அன்பர்கள் தின வாழ்த்துக்கள்...


Feb 9, 2010

இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம்-பாகம் 4

-ஏ.கே.கான்

இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்ததுக்கு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டே இன்னொரு பக்கம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் ஹைட் ஆக்ட் (Hyde Act).

Henry J. Hyde உருவாக்கிய இந்த சட்டம் ஒப்பந்தத்தில் திணிக்கப்பட்டால் (திணிக்கப்பட்டாகிவிட்டது என்கின்றனர் இடதுசாரிகள்), இதன் 109வது பிரிவு, அணு ஆயுத பரவலை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவையும் தேவையில்லாமல் இழத்துவிடும்.

உதாரணத்துக்கு ஒன்று: அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்துவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் நாமும் ஒரு 'பார்ட்டி' ஆகி விடுவோம. அதாவது, இந்தியாவின் ஒப்புதலோடு நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது என அமெரிக்கா சொல்லலாம். அமெரிக்காவுக்கு அவ்வளவு இடம் தருகிறது இந்த சட்டம்.

ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது, அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு [^].


இதை விளக்க மீண்டும் ஈரானையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். எங்கள் போர் விமானங்களுடன் இந்திய விமானங்களும் வந்து குண்டு போட வேண்டும் என அமெரிக்கா சொன்னால், அதை நாம் கேட்க வேண்டும். அதெல்லாம் முடியாது என்று நாம் சொன்னால், இந்தியா ஒப்பந்தத்தை மீறுகிறது.. என அமெரிக்கா வம்பிழுக்க முடியும்.

மேலும் Proliferation Security Initiative (PSI) என்று ஒரு விஷயம் உண்டு. இதன்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதத்தைத் தருவதாகத் தெரிந்தால் அதை வழியிலேயே தடுத்து நிறுத்தலாம்.. அழிக்கலாம். பாகிஸ்தானுக்கு வட கொரியா கப்பல் மூலம் அணு ஆயுதத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அதி்ல் PSI ஒப்பந்த நாடுகள் இடைமறித்து பறிக்கலாம்.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையொப்பமிடவில்லை. ஆனால், அமெரிக்காவின் ஹைட் ஆக்ட் நம்மையும் PSIக்குள் இழுத்து விட்டுவிடும்.

அப்புறம் Wassenaar Arrangement என்று இன்னொரு ஆயுத (அணு ஆயுதம் அல்லாத) ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம். இதிலும் நாம் இதுவரை கையெழுத்துடவி்ல்லை. ஆனால், இதிலும் நம்மை நாம் கேட்காமலேயே நுழைத்து விடுகிறது ஹைட் ஆக்ட்.

இது போக Australia Group. இது ரசாயன-உயிரியல் ஆயுத உற்பத்தி-பரவலை தடுக்கும் ஒரு ஒப்பந்தம். இதிலும் நாம் சேரவில்லை. ஆனால், இங்கேயும் போய் நம்மை மாட்டி விடுகிறது ஹைட் ஆக்ட்.

இதன் மூலம் சர்வதேச விவகாரங்களில் நமக்கென்று உள்ள தனித்தன்மை, சுதந்திரம், உரிமையில் அமெரிக்கா முழு அளவில் தலையிடுவதற்கு வழி செய்து தருகிறது ஹைட ஆக்ட்.

இதெல்லாம் அணு ஒப்பந்தம் [^] தொடர்பாக நம்மிடம் முதலில் பேசியபோது அமெரிக்கா சொல்லாத விஷயங்கள்.. மேலும் இந்த ஆக்ட் சொல்வது எல்லாமே IAEAவின் ரூல்ஸ்களிலும் அடங்காத விஷயங்கள். முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள்.

இதைத் தான் இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இப்படி நம்மிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அமெரிக்கா இருக்கிறதே.. இவர்களை நம்பியா ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என கோபத்துடன் கேட்கின்றனர் காம்ரேடுகள்.

மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் கையெழுத்து போடும் முன் நமது அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு [^] அம்சங்கள் குறித்து IAEAவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும்.

IAEAவுடன் என்ன பேசப் போகிறீர்கள். அதன் விவரங்கள் என்ன என்று இடதுசாரிகள் கேட்கின்றனர். ஆனால், அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான 'பரம ரகசியம்'.. இதனால் அதைப் பற்றியெல்லாம் வெளியில் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர்.

ஆனால், IAEA கூறும் பாதுகாப்பு யோசனைகளை இந்தியா ஏற்றால், பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தில் இருந்து அணு ஆயுதத்துக்குத் தேவையான புளுட்டோனியம் தயாரிக்க ஒரு தனி பிரிவை (dedicated facility) இந்தியா உருவாக்க வேண்டும்.

அதை IAEA ஆய்வாளர்கள் பார்வையிடவும் நாம் அனுமதித்தாக வேண்டும். இதன்மூலம் நமது அணு ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியில் போகலாம்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அணு ஆராய்ச்சிகள் தொடர்பான சுதந்திரத்தை IAEAவிடம் இழக்கப் போகிறீர்களா.. என்று கேட்கின்றனர் இடதுசாரிகள்.

மேலும் ஒப்பந்தம் என்று வந்த பிறகு இந்தியாவுக்கு அணு தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை அமெரிக்கா வழங்குவது தொடர்பான எல்லா விவரங்களும் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் தானே வர வேண்டும். ஆனால், அவை எல்லாம் அமெரிக்க சட்டங்களின் கீழ் வரப் போகின்றன. இதுவும் இடதுசாரிகளை எரிச்சல்படுத்தியுள்ள இன்னொரு அம்சம்.

ஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசு ஏன் ஒப்பந்ததுக்கு தயாராக உள்ளது? என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கு அவர்கள் சொல்லும் பதில். இடதுசாரிகள் சொல்வதைப் போல ஹைட் ஆக்ட் நம்மை கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது. அது அமெரிக்காவின் Domestc Law. அது அவர்களைத் தான் கட்டுப்படுத்தும், நம்மை அல்ல.

மேலும் இந்திய-அமெரிக்க ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட் இருக்கவே இருக்காது.

இதனால் இந்த ஆக்ட் குறித்து நம்மிடம் அமெரிக்கா பேசவும் இல்லை, நாம் ஹைட் ஆக்டை ஏற்கப் போவதும் இல்லை. நாம் ஏற்காத ஒன்றை அமெரிக்கா நிச்சயம் நம் மீது திணிக்கவே முடியாது.

ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது செய்யும் அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு.

ஆனால், ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட்டை தவிர்க்க முடியாது. அதை அமெரிக்கா நிச்சயமாக இந்தியா மீது திணிக்த்தான் போகிறது என்கின்றனர் இடதுசாரிகள்.

இத்தனை விவகாரங்கள் இருந்தாலும் இதை அணு விஞ்ஞானிகளும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் ஆதரிப்பது ஏன்?..

காரணம் இந்த ஒப்பந்தம் நமக்கு அளிக்கப் போகும் பலன்கள் அப்படி..

முடிந்தது...

அன்புடன்
உங்கள்
மாறன்....

Feb 8, 2010

இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம்-பாகம் 3

-ஏ.கே.கான்

(யானைக்கும் அடி சறுக்கும்.. ஆனால், எறும்புக்கும் அடி சறுக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கீர்களா?. முந்தைய கட்டுரையில் எனக்கு அது நடந்தது. ''இதற்கு அதிபர் புஷ்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது'' என்பதற்கு பதிலாய் கிளின்டன்-வாஜ்பாய் என்று எழுதியதை சிறிய தவறு தான் என்று சொல்லி நான் தப்பிக்க மாட்டேன். அது கட்டுரையில் பெரிய 'Time-line' குழப்பத்தைத் தந்துவிட்டது என்பது உண்மை தான். தவறு திருத்தப்பட்டுள்ளது. குழப்பத்துக்கு என் வருத்தங்கள்)

இனியும் நாம் காலாகாலத்துக்கு தடைகளை சந்தித்துக் கொண்டு, அதனால் வளர்ச்சியை விட்டுவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த மன்மோகன் சி்ங் அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் சீரியஸ் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார்.

இந்தியாவின் தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. ஒரு 'நல்ல நாளில்' இந்தியா மீதான தடைகளை நீக்குவதாக அறிவித்தார் ஜார்ஜ் புஷ். (கூடவே பாகிஸ்தான் [^] மீதான தடைகளும் நீங்கின).

இந்த அறிவிப்புக்கான காரணமே, இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் [^] செய்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது தான்.

இதைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கியது தான் High Technology Cooperation Group (HTCG). இது அதி உயர் தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வகை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிக உயர் மட்டக் குழு. இந்தக் குழுவின் முக்கிய 'டிஸ்கசன் அஜெண்டாவே' அணு சக்தி தொழில்நுட்பம் தான்.

இந்த விஷயத்தில் தொய்வே கூடாது என முடிவெடுத்த பிரதமர், தனது 'Man Firday'வான (வலது கரம் என்பார்களே.. அது) திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையே நேரடியாகக் களத்தில் இறக்கிவிட்டார்.

இந்தியா-அமெரிக்கா எரிசக்தி பேச்சுவார்த்தை (அணு சக்தி என்று படிக்கலாம்..) என்ற பெயரில் இரு நாடுகளும் 5 உயர் மட்டக் குழுக்களை உருவாக்கின. இந்த 5 குழுக்களையும் ஒருங்கிணைத்தார் மாண்டேக் சிங்.

இந்தக் குழுக்களில் அமெரிக்காவின் சார்பில் U.S. Department of Energy (DOE) பிரிவின் அதிகாரிகளும், அதில் பெரும்பாலானவர்கள் அணு சக்திப் பிரிவினர், இந்தியாவின் சார்பில் Nuclear Regulatory Commission (NRC) அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இவர்கள் பேசியது இந்தியாவின் அணு சக்தித் துறைக்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவலாம் என்பது தான். மாண்டேக் சிங்கின் பொருளாதார மூளை தனது டெக்னாலஜி வாதத் திறமையையும், இந்த குழு உறுப்பினர்கள் மூலமாக, சேர்த்துக் காட்ட பேச்சுவார்த்தைகளில் புலிப் பாய்ச்சல்.

அப்போது தான் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பி்க்க, இடதுசாரிகளுக்கு 'பி.பி' எகிறியது. என்னமோ நடக்குது என்று என அவர்கள் விழித்துக் கொள்வதற்குள் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்துக்கு, அதாவது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு, என்ற அளவுக்கு கொண்டு வந்திருந்தார் மாண்டேக் சிங்.

ஈராக் பெட்ரோலிய (ஹை.. பெட்ரோல்!) ஊழலில் சிக்கி நட்வர் சிங் கழற்றிவிடப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி [^] வெளியுறவு அமைச்சரான புதிது. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த அணு சக்தி பேச்சுவார்த்தைகள் குறித்த முழு விவரத்தையும் உள் வாங்கியிருந்த முகர்ஜியும் பிரதமர் உத்தரவால் வேகம் காட்டினார்.

மாண்டேக் தலைமையிலான குழுவினர் தந்த யோசனைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரை பிரணாப் முகர்ஜியும் சந்தித்து அணு ஒப்பந்தம் குறித்து இருவரும் ஒரு அவுட்-லைனை உருவாக்கினர்.

இந்த ஒப்பந்த ஷரத்துகள் குறித்து முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளுடன் பேச்சு நடத்தினார் பிரதமர் மன்மோகன். அப்போது வி்ஞ்ஞானிகள் சொன்ன யோசனைகள் மிக முக்கியமானவை.

இந்த ஒப்பந்தத்தின்படி நமது அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகத்தின் (IAEA-International atomic energy agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அதை கடுமையாய் எதிர்த்தனர் விஞ்ஞானிகள்.

இதனால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தேக்கம் ஏற்பட, விஞ்ஞானிகளே ஒரு தீர்வையும் கூறினர்.

நமது அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன், மிலிட்டரி என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் சிவிலியன்-அதாவது மி்ன் உற்பத்திக்கு பயன்படும் அணு நிலையங்களை மட்டும் IAEA பார்வையிட அனுமதி தரலாம்.

மிலிட்டரி- அதாவது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களில் இருந்து அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள் என்றனர்.

இது நல்ல யோசனையாகப் படவே அது குறித்து IAEAவுடன் பேச்சு நடத்துவது என்று முடிவெடுத்தது மத்திய அரசு [^]. இது civil nuclear deal தான். இந்த ஒப்பந்தப்படி ராணுவ ஆராய்ச்சி தொடர்பான அணு உலைகளை பார்வையிட வேண்டிய அவசியமோ தேவையோ IAEAவுக்கு இல்லை.

இதை இந்தியா வந்த IAEA டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல் பாரடாயிடம் பிரதமர் விளக்க, அவரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் இது குறித்து மேலும் விளக்கமாக பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறிவிட்டுச் சென்றார்.

இந்தச் சந்திப்பு மிக 'இன்பார்மலாக' நடத்தப்பட்டது. காரணம், ''அதுக்குள்ள IAEA கூட பேசுற அளவுக்கு போயாச்சா, அமெரிக்கா கூட எல்லா டீலிங்கும் ஆயிருச்சா'' என இடதுசாரிகள் பிடித்துக் கொள்வார்களே.... இதனால் எல்லா வேலையையும் 'நல்லபடியாக' முடித்துவிட்டு அப்புறமாக இடதுசாரிகளிடம் வருவோம் என்ற கணக்கில் இந்த விஷயத்தை கையாண்டது மத்திய அரசு.

ஆனால், முகம்மத் அல் பாரடாய் வந்துவிட்டுப் போனது இடதுசாரிகளுக்கு பி.பி.யோடு கூடவே 'நெஞ்சு வலியையும்' தந்துவிட்டது.

இன்னொரு பக்கம் அமெரி்க்காவிடமும் இந்திய ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களில் எக்காரணம் கொண்டும் மூக்கை நுழைக்கக் கூடாது என எடுத்துச் சொல்ல, முதலில் யோசித்த அமெரிக்கா, பின்னர் தலையாட்டியது.

இப்படி எல்லா அம்சங்களும் கூடி வரவே, ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் தரும் முடிவோடு 2005- ஜூலை மாதம் அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மன்மோகன் சிங்.

புஷ்சுடன் பல மணி நேரப் பேச்சு.. உருவானது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.

ஏற்கனவே பிபி, நெஞ்சு வலியோடு தவித்த இடதுசாரிகளுக்கு கடும் டென்சன், காய்ச்சலே வந்துவிட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அணு சக்தி தொடர்பான தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றைத் தர அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது.. அதாவது '123' சட்டத்தின்படி.

இது என்னாது?.

எந்த ஒரு நாட்டுடனும் அமெரிக்கா அணு ஒப்பந்தம் (Civil nuclear deal) செய்ய வேண்டுமானால், அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ், ஒரு தனி ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது தான் '123 Agreement'.

ஆனால், இந்த ஒப்பந்தம் செய்யும் முன் முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) அதிபர் அனுமதி பெற வேண்டும். இந்தியா விஷயத்தில் அதையும் பெற்றுவிட்டார் புஷ்.

இதுவரை 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது அமெரிக்கா. இதில் சீனாவும் அடக்கம்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அணு ஆயுதத்தையோ தொழில்நுட்பத்தை அடுத்த நாட்டுக்கு தரக் கூடாது. தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியையோ அல்லது ஆயுதத்துக்கான உதிரி பாகத்தையோ கூட தரக் கூடாது.

இந்த ஒப்பந்தம் 40 ஆண்டுகள் அமலில் இருக்கும். பின்னர் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், அதையடுத்து காலாவதியாகிவிடும். புது ஒப்பந்தம் தான் போட வேண்டும்.

இந்த ஒப்பந்தப்படி இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை, தொழில்நுட்பத்தை தங்கு தடையின்றி அமெரிக்கா வழங்கும்.

மேலும் இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாடுகளை (safeguards) அமல்படுத்த வேண்டும். இதற்காக IAEAவுடன் பேச்சு நடத்த வேண்டும். அவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டால் போதும், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிடலாம்.

(இங்கு தான் ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களை IAEA-வுக்கு திறந்துவிட முடியாது என இந்தியா கூறிவிட்டது)

இடையில் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால், சோதனை நடத்தப்பட்ட ஓராண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். அமெரிக்க எரிபொருள் சப்ளை (யுரேனியம்-தோரியம்) நின்றுவிடும். ஆனால், அதற்கான நஷ்டஈட்டை அமெரிக்கா பணமாகத் தந்துவிடும்.

மேலும் Nuclear supply group-ல் உள்ள தனது நட்பு நாடுகளிடம் இருந்து இந்தியா எரிபொருளை தொடர்ந்து பெறலாம். அதற்கு தடையில்லை.

அதே போல இந்தியா நினைத்தால், ஓராண்டு நோட்டீஸ் தந்துவிட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம்.

எல்லாமே நல்லா தானே இருக்கு... அப்புறம் என்ன, எதற்காக இடதுசாரிகளுக்கு 'காய்ச்சல்' வந்தது?

காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் சுட்டிக் காட்டுவது 'ஹைட் ஆக்ட்'..

இது என்ன என்று தெரிந்தால் நமக்கும் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ, அட்லீஸ்ட் கோபத்தில் காதில் புகையாவது வரும்...

தொடரும்..

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

Feb 7, 2010

இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம்-பாகம் 2

-ஏ.கே.கான்

போக்ரான்...

அப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம்.

'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது 'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார்.

மீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம்.

அணு குண்டு சோதனையை அமெரிக்கா [^] உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.

இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.

அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர்.

பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர்.

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.

கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம்.

மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.

ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான்.

சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான்.

அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார். இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்..

அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.

கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன.

கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..

வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.

உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!. இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம்.

இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.

அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.

இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது. 1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம். 2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான். 3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.

(அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் 'சண்டை' போட வேண்டி வரும்)

இந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது? என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா!

ஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை.

இந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம். தீவிரவாதம் [^] குறித்த அதன் பார்வை மாறிய தினம்.

அதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது.

தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை.

இந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் 'strategic planners'-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது. எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா.

இந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் 'சடசட' மாற்றங்கள்.

இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது.

இந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய 'மாராதான்' பேச்சுவார்த்தைகள் தான்.

இருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான்.

ஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை 'ஜாகிங்' செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து 'சுவர்களை' படிப்படியாக இடித்தனர்.

இதற்கு அதிபர் கிளின்டன்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது.

அணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான்.

Comprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா.

NPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது.

ஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா.

அதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இந்தியா.

இந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங். அமெரிக்கா-மேலைநாடுகளின் 'மார்க்கெட் எகானமி' மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங்.

சோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத 'சோகக் கதையை' மறந்துவிட்டுப் பார்த்தால்).

சந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா!!) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம்.

ஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான்.

'ரெட் டேப்' சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை 'மீட்டு' (இடதுசாரிகள் 'மாட்டி' விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான்.

இதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. தன் மீதான அமெரிக்காவின் இந்த நம்பிக்கையை அப்படியே நாட்டின் நலனுக்காக முழுமையாய் பயன்படுத்த நினைத்த மன்மோகன், அணு சக்தி விவகாரத்தில் கையை விட்டார்...

தொடரும்..

(கட்டுரையாளர் thats thamil ஆசிரியர்)

Feb 6, 2010

இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம்-பாகம் 1

-ஏ.கே.கான்

(இது இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை. சில பாகங்களாக வெளி வரும்)

நாள்: 1974ம் ஆண்டு மே 18ம் தேதி காலை 7 மணி...

இடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி.

எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர்.

இடம்: டெல்லி. காலை 8 மணி.

பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். இன்னும் 'தகவல்' வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்..

மணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா. மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, 'Buddha has finally smiled'.

மகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, 'இந்தியா அணு குண்டு சோதனை' என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. ஆனால், உலகம் அதிர்ந்தது.

இந்தியாவா..? அணு குண்டா..? நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள். குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும்.

சீனப் போரில் ஏற்பட்ட தோல்வியின் வலியில் உருவானது தான் நமது முதல் அணு குண்டு.

ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவில் 1940களிலேயே அணு ஆராய்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஆனால், மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக, ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின.

வந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். நமது அப்துல் கலாமின் குரு. மீண்டும் சூடு பிடித்தது ஆராய்ச்சி. அவரும் இடையிலேயே திடீரென மரணமடைய டாக்டர் ஹோமி சேத்னா-டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர் இணைந்து நடத்தியது தான் போக்ரானின் முதல் அணு குண்டு சோதனை.

இந்த மொத்த புராஜெக்டும் மகா ரகசியமாக வைக்கப்பட்டது. மொத்தமே 75 விஞ்ஞானிகள்-பொறியாளர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியம் தெரியும். மத்திய அரசின் கேபினட் செக்ரடரிக்கே கூட தகவலை சொல்லவில்லை இந்திரா. அத்தனை ரகசியம் காத்தார் பிரதமர்.

சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தியிருந்த நிலையில் 1974ல் குண்டைப் போட்டது இந்தியா.

அன்று முதல் ஆரம்பமாகின தடைகள்.. குறிப்பாக அணு உலைகளை கட்ட, அணு சக்தி தொழில்நுட்பம் தர, அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்த பல நாடுகளும் 'ஜகா' வாங்கின.

அந்த தொழில்நுட்பத் தடைகளால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். இன்று பெட்ரோலுக்கும் (ஐயோ.. மீண்டும் பெட்ரோலோ என ஓடாதீர்கள்..), எரிசக்திக்கும் நாடு நாடாய் ஓடிக் கொண்டிருக்கிறோமே.. இதற்கு முக்கியக் காரணம் அணு சக்தி தொடர்பான தடைகள் தான்.

அசுர வளர்ச்சியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதை 'sustain' செய்ய, 2050ம் ஆண்டுக்குள் நமது மின்சார உற்பத்தியை இப்போது இருப்பதை மாதிரி மேலும் சில மடங்காக உயர்த்த வேண்டியது மிக அவசியம்.

நீர் மின்சாரம், நிலக்கரி என நம்மிடம் உள்ள இயற்கை வளத்தைக் கொண்டு அந்த இலக்கை எல்லாம் எட்டுவது இயலாத காரியம். மழையை நம்பி, அணைகளைக் கட்டி, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டி, நிலக்கரி தோண்டுவதை அதிகரித்து.. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்குள் 2050ம் ஆண்டு வந்துவிட்டு போயிருக்கும்.

நம்மிடம் உள்ள ஒரே அஸ்திரம் அணு சக்தி தான்.

ஆனால், அணு சக்தியை முழுமையாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம், எரிபொருள்களான யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற இந்தியா மீதான தடைகள் பெரும் சிக்கலாக உள்ளன.

1974க்கு முன் வரை நமக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால், அணு குண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின.

சோவியத் யூனியன் மட்டும் தான் நமக்கு துணை நின்றது. மிக ரகசியமாக ராஜஸ்தான் அணு மின் நிலையத்துக்குத் தேவையான 'ஹெவி வாட்டரை' வழங்கியது. இது அணுக்களை பிளக்கும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் திரவம். இது பத்திரிக்கைகளில் கசிய சோவியத் யூனியன் உலக கண்டனத்துக்கு ஆளானது.

அதே போல பிரான்சும் ஓரளவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. தாராபூர் அணு மின் நிலையத்துக்கு அமெரிக்கா யுரேனியத்தை திடீரென நிறுத்த இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந் நிலையில் அதைத் தர பிரான்ஸ் முன் வந்தது.

இதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர்.

1968ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்ற ஒரு ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் கொண்டு வந்தன. அதன்படி அவர்களைத் தவிர யாரும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற ரூல் போடப்பட்டது. இதில் எல்லாம் கையெழுத்து போட முடியாது என இந்தியா மறுக்கவே.. மேலும் பல தடைகள் வந்தன, இதனால் அணு ஆராய்ச்சியிலும் மின் உற்பத்தியிலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.

இருந்தாலும் இன்று வரையிலும் இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்தியா கையெழுத்து போட்ட பின் நாங்கள் போடுகிறோம் என்று பாகிஸ்தானும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது).

இந் நிலையில் 1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

கல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து, நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் 10, 15 ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. இப்போது தான் ரஷ்ய உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தைப் பிடித்துள்ளது.

ஆனால், ரஷ்யாவை மட்டுமே நம்பி நாம் இனியும் காலம் தள்ள முடியாது. காரணம், அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பந்தங்கள் தான்.

1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group. எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அங்கம்.

நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற நாம் இந்த 'குரூப்' நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்க குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன.

ஆக, இங்கேயும் நமக்கு 'ஆப்பு' வைத்தது அமெரிக்கா தானே.. இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடதுசாரிகளின் இன்னொரு கேள்வி.

இத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த யுரேனியத்தை 'ரீ-புராஸஸ்' செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான புளுடோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் கொண்டு (Nuclear Fusion) டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை தொடர்ந்தது.

மேலும் கனடா பாதியில் கழன்று கொண்டாலும் அவர்கள் கொடுத்துவிட்டுப் போன 'டிசைனை' மட்டுமே வைத்து ஒரு அணு உலையை வெற்றிகரமாக அமைத்தும் காட்டியது இந்தியா.

அதே போல ஜெர்மனியிடமும் ரகசியமாகப் பேசி 95 கிலோ பெரிலியம் (beryllium) என்ற தனிமத்தை வாங்கியது. இது அணு குண்டுகளில் நியூட்ரானை வேகப்படுத்த உதவும் பொருள். இந்த beryllium அமெரிக்காவில் தயாரானது. இதை விற்றதற்காக ஜெர்மன் நிறுவனத்துக்கு அமெரிக்கா 800,000 டாலர் அபராதம் விதித்தது.

அதே போல ருமேனியாவிலிருந்து ஹெவி வாட்டர், சுவீடனில் இருந்து flash x-ray (இது அணுப் பிளவின் வேகத்தை படம் பிடிக்க உதவும் கருவி) என அமெரிக்கா தலைமையிலான தடைகளை இந்தியா வேறு வழிகளில் உடைத்துக் கொண்டே வந்தது.

ஆனால், இவையெல்லாம் இந்தியாவுக்கு நியாயப்படி நேரடியாக கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் தான். இதைப் பெற பல்வேறு வழிகளை இந்தியா பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் இந்தியாவுக்கு பெரும் கால நஷ்டம் ஏற்பட்டது.

இந் நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர முடியாது என சீனியர் ஜார்ஜ் புஷ் மறுத்தார். இதை இந்தியா அணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என குற்றம் சாட்டினார்.

இந்தியா அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும், அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு குண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே புரிந்து கொள்வார்கள். இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலக்குக்கு காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூற, அவரும் தலையை ஆட்டினார்.

ஆனால்....

1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்..

மீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே 'லைவ்' ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள்.

அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ்.

நிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை.

பொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மே மாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது.

இம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல் கலாம்.

அப்துல் கலாமுக்குள் இருந்த 'அணு விஞ்ஞானி' குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த 'ராக்கெட்-சேட்டிலைட்' விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன் சுழற்சியை 'கால்குலேட்' செய்து கொண்டிருந்தார்....

தொடரும்..

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

Feb 5, 2010

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து....

கூகுள் நிறுவனத்தின் சர்வர்களில் சில ஹேக்கர்கள் நுழைந்து மெயில்களை நாசம் செய்ததாக சில வாரங்களுக்கு முன் பெரிய அளவில் பிரச்னைகளும் அதன் பின்விளைவுகளும் நடந்தேறின.

இதன் காரணமாக சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் தகராறு முற்றி, சீனாவிலிருந்து கூகுள் வெளியேறும் எல்லை வரை இந்த பிரச்னை சென்றுவிட்டது.

கூகுள் மெயில் சர்வருக்குள் புகுந்து நாசம் செய்தவர்கள் சீனாவில் இயங்கும் ஹேக்கர்கள் தான் என்பது பலரின் வாதம். யார் என்பதைக் காட்டிலும், இந்த சர்வர் இயக்கத்தில் எங்கு பிழை ஏற்பட்டு ஹேக்கர்கள் நுழைந்தனர்? கூகுள் நிறுவனத்திற்கே இந்த கதி என்றால் நம் மெயில்கள் எல்லாம் என்ன ஆவது?

என்ற கவலை நம்மில் பலரைத் தொற்றிக் கொண்டது. இதற்கான மூலகாரணம் என்ன என்று பார்க்கும் போது, மைக்ரோசாப்ட் நிறுவனம், கூகுள் மீது ஏற்பட்ட பாய்ச்சலுக்குத் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள பிழைகளே காரணம் என்று ஒத்துக் கொண்டது.

அதனைச் சீர்செய்திடும் வழிகளையும் காட்டி உள்ளது. அந்த வழிகளை நாமும் பின்பற்றி நம் சர்வர்களையும், கம்ப்யூட்டர் களையும் பாதுகாத்துக் கொள்ளலாமே என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா! ஆசை எழுவது இயல்பு தானே. மிக எளிதாக இந்த பாதுகாக்கும் வழியை மேற்கொள்ள லாம். அதனை இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் 2000 சிஸ்டத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5 வரை, இத்தகைய பிரச்னை எதுவுமில்லை. IE 6, IE 7, மற்றும் IE 8 ஆகிய பதிப்புகள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, சர்வர் 2003, விஸ்டா, சர்வர் 2008, விண்டோஸ் 7 மற்றும் சர்வர் 2008 E2 ஆகியவற்றில் தான் இந்த பிழை உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த இயக்கங்கள் எல்லாமே இப்போது அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இன்றைய நிலையில் இவற்றால் ஏற்படும் ஆபத்தினை முழுமையாகத் தவிர்க்க இயலவில்லை என்று மைக்ரோசாப்ட் ஒத்துக் கொண்டுள்ளது. இருந்தாலும் பிழை இருப்பதனை ஓரளவிற்கு மறைத்து வைக்க முடியும் என்று கூறி உள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள Protected Mode என்பதனை இதற்குப் பயன்படுத் தலாம். இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும்போது கிடைக்கிறது. இத்துடன் Data Execution Protection என்பதனையும் இயக்கை வைக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள IE security zone I "High"என வைப்பதும் ஒரு வழியாகும்.

புரடக்டட் மோட்:

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் தரப்பட்டுள்ள புரடக்டட் மோட் (விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல் கிடைக்கும்) ஹேக்கர் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரில் தன்னுடைய டேட்டா அல்லது புரோகிராமினைத் திணிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. எனவே இந்த வழியை இயக்கி வைப்பது நல்லது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இது தானாக இயக்கிவைக்கப்படுகிறது.

ஆனால் முந்தைய பதிப்புகளில் நாம் தான் இதனை இயக்க வேண்டும். அடுத்ததாக, ஆக்டிவ் ஸ்கிரிப்டிங் இயங்குவதைத் தற்காலிகமாக நாம் நிறுத்தி வைக்க வேண்டும். இதனால் இதனை இயக்கும் முன் நமக்கு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அப்போது இதனைத் தற்காலிகமாக இயக்க அனுமதிக்கலாம். ஆனால் அவ்வாறு அனுமதிக்கும் முன் இன்டர்நெட் செக்யூரிட்டி செட்டிங்ஸை "High" என செட் செய்திட வேண்டும்.

புரடக்டட் மோட் வழியை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். IE 7 மற்றும் IE 8 பதிப்புகளில் இது மிகவும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Enable Protected Mode என்பதற்கு முன்பாக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இவ்வாறு அமைத்த பின் மாற்றங்களை இயக்குவதற்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும்.

இதே போல் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி ஸோனை "High" ஆக வைப்பதும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து அங்கு காணப்படும் ஸ்லைடரை "High" என்பதை நோக்கித் தள்ளிவிடவும். இந்த செட்டிங்ஸ் இயக்கத்திற்கு வர, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோ ரரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதில்லை.

டி.இ.பி. (DEP Data Execution Protection) இயக்க: இந்த பாதுகாப்பு வழி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இயக்கப்பட்டே கிடைக்கிறது. அதை உறுதிப்படுத்தவும், பதிப்பு 7ல் இயக்கவும், கீழே தரப்பட்டுள்ளபடி செயல்பட வேண்டும். Tools —> Internet Options சென்று Advanced டேப்பினைக் கிளிக் செய்திடவும்.

பின் Security பிரிவுக்கு ஸ்குரோல் செய்து செல்லவும். அடுத்து "Enable memory protection to mitigate online attacks" என்று இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றம் செயல்பட, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடிப் பின் மீண்டும் இயக்கவும்.

இதனை எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ல் இயக்குவது என்று பார்க்கலாம். மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்வான்ஸ்டு டேப்பில் கிளிக் செய்திடவும்.

இனி Performance என்பதில் செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுத்து, Data Execution Prevention என்ற டேப்பிற்குச் செல்லவும். அடுத்து "Turn on DEP for all programs and services except those I select" என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து மூடவும்.

மைக்ரோசாப்ட் ஈஉக தானாக இயங்க டூல் ஒன்றை தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பெற http://support.microsoft. com/kb/979352 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அதில் தரப்பட்டுள்ள குறிப்புகள் படி செயல்படவும்.

மேலே கண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டால், ஹேக்கர்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பு பெற முடியுமா? சந்தேகம்தான். இருப்பினும் ஓரளவிற்கு பாதுகாப்பினை இது தரும்.

மைக்ரோசாப்ட் விரைவில் இதற்கான பேட்ச் பைல் ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த செய்தியை எழுதும் நேரத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு ஸ்பெஷல் பேட்ச் பைல் ஒன்றை வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஆனால் ஜெர்மனியில் பயர்பாக்ஸ் பிரவுசர் டவுண்லோட் திடீரென அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சீன கூகுள் ஹேக்கர் பிரச்னையால், ஜெர்மனியில் இயங்கும் இணைய பாதுகாப்பு மையம், Federal Office for Information Security, , இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நீக்கிவிட்டு, வேறு ஏதேனும் ஒரு பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்குமாறு அறிவித்துள்ளது.

இதனால் நான்கு நாட்களில் மட்டும் ஜெர்மனியில் 3 லட்சம் பேர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்துள்ளனர். காண்க:http://blog.mozilla.com/metrics/2010/01/19/peopleingermanyareswitchingbrowsers/ இதேபோல் பிரான்ஸ் நாட்டின் இன்டர்நெட் பாதுகாப்பு மையமான CERTA வெளியிட்ட அறிக்கையில், இன்டர்நெட் பிரவுசரை நிறுத்திவிட்டு வேறு பிரவுசரைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதே போன்ற ஒரு எச்சரிக்கை ஆஸ்திரேலியாவிலும் வெளியாகியுள்ளது.

அன்புடன்
உங்கள்
மாறன்....



கருத்து சொன்னவர்கள் (Recently):